தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த குறைகளை உடனுக்குடன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதிய கட்டணமில்லா தொலைபேசி (Toll-Free) எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.<br><br>இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:<br><br>தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் தங்கு தடையின்றி, போர்க்கால அடிப்படையில் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.<br><br>இருப்பினும், மாநகராட்சியின் இந்தச் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது தினசரி பராமரிப்புப் பிரச்சனைகள் இருந்தால், பொதுமக்கள் அது குறித்துப் புகார் அளிக்க தங்களது வார்டு கவுன்சிலர்களையோ அல்லது மாநகராட்சி அலுவலகங்களையோ தேடி அலைந்து நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.<br><br>இதற்காகவே, மாநகராட்சி அலுவலகத்தில் பிரத்தியேகமாக 1800 203 0401 என்ற புதிய கட்டணமில்லாத் தொலைபேசி (Toll-Free) வசதி தற்பொழுது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.<br><br>மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை, தெருவிளக்குகள் எரியாதது அல்லது சாக்கடை நீர் தேங்குதல் போன்ற எந்தவொரு சுகாதாரப் பிரச்சினையாக இருந்தாலும், பொதுமக்கள் உடனடியாக 1800 203 0401 என்ற இந்த டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.<br><br>இதன் மூலம் தங்களது புகார்களைப் பதிவு செய்து, அதற்கான தீர்வுகளை விரைவாகப் பெற்றுப் பயனடையுமாறு மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்