<p><b>பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து புதூரில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களை முறையாக கணக்கீடு செய்யாமல் 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டுகளுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாததை கண்டித்தும், மழையால் முற்றிலுமாக பாதிப்படைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்காததை கண்டித்தும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில் இன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விட்டு சாலை ஓரமாக நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p>ஆர்ப்பாட்டத்தின் போது, உடனடியாக பயிர் காப்பீட்டு தொகையும், இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்றும், பயிர் காப்பீடு கம்பெனியான "IFFCO TOKIO"-யை மாற்றுவதோடு மட்டுமின்றி, மழை வெள்ள நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும், தமிழக அரசு உடனடியாக சேதமடைந்த அனைத்து பயிர்களை முறையாக கணக்கீடு செய்து காப்பீடு மற்றும் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவிலான சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>