<p><b>மாதம் ஒருமுறை மீனவ மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சிதம்பரனார் மாவட்ட மீனவர் மற்றும் சங்குகுளி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.</b></p><p>இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :&nbsp;</p><p>தூத்துக்குடி அருகே , முள்ளக்காடு ஊராட்சிக்குட்பட்ட கோவளம் மீனவர் குடியிருப்பு பகுதியில் பல தலைமுறைகளாக 60 குடும்பங்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகிறார்கள். மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.</p><p>இந்த நிலையில், அப்பகுதிகளில் கடல் பேரலை பாதிக்காதவாறு கடலோரங்களில் சவுக்கு மரங்கள் வைக்கப்பட்டது. தற்போது இந்த மரங்கள் பராமரிப்பு இல்லாததால் வளர்ச்சியில்லாமல் அனைத்தும் அழிந்து விட்டது. ஆகவே, மீண்டும் அங்கு சவுக்கு மரங்கள் வைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.&nbsp;</p><p>அதே போல், கடற்கரையோரங்களில் மீனவர்கள் வலைகளை உலர்த்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் முள் செடிகள், பூங்கா பணிகளுக்காக அகற்றப்படுகிறது. எனவே, மீனவர்கள் வலைகளை உலர்த்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் முள் செடிகள் அகற்றும் பணி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வலைகளை உலர்த்துவதற்கும், நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.</p><p>மாதம் ஒருமுறை மீனவ மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். உள்ளிட்டவைகள் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.</p>