<p><b>காச்சிகுடா - தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் சேவை நாளை ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தொடங்குகிறது.</b></p><p><br></p><p>பயணிகளின் வசதிக்காக, தற்போது சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் காச்சிகுடா – மதுரை ரயிலை, நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இனி இந்த ரயில் "காச்சிகுடா – தூத்துக்குடி விரைவு ரயில்" என்ற பெயரில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் எனவும் அதற்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டது.</p><p><br></p><p>அதன்படி,&nbsp; காச்சிகுடா – தூத்துக்குடி காச்சிகுடாவில் இருந்து ஏப்ரல் 6, 2026 முதல் (திங்கட்கிழமை), தூத்துக்குடியில் இருந்து ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தொடங்குகிறது. காச்சிகுடாவில் இருந்து திங்கட்கிழமைகளிலும், மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து புதன்கிழமைகளிலும் இந்த ரயில் வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படுகிறது.</p><p><br></p><p>இந்த ரயில் காச்சிகுடாவில் திங்கள் மதியம் 3.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (செவ்வாய்) இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வருகிறது. மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து புதன் காலை 07.40 மணிக்குப் புறப்பட்டு, வியாழன் மதியம் 1.25 மணிக்கு காச்சிகுடா சென்றடைகிறது.</p><p><br></p><p>தமிழகத்தில் வேலூர் கண்டோன்மென்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது.</p><p><br></p><p>இந்த ரயில் நாளை ஏப்ரல் 8, 2026 முதல் (புதன்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது. இந்த ரயில்&nbsp; சேவை, தென் தமிழக மக்கள் தெலங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.</p>