<p><b>முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.&nbsp;</b></p><p><br></p><p>ஓபிஎஸ்சின் இந்த முடிவுக்கு அவரது&nbsp; ஆதரவாளர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை, ஓபிஎஸ்-ஸின் முடிவை வன்மையாகக் கண்டித்துள்ளார்.</p><p><br></p><p>செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, தனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் உருவப்படங்களை ஏசாதுரை அதிரடியாக அப்புறப்படுத்தினார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p><br></p><p>பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏசாதுரை கூறியதாவது:</p><p><br></p><p>எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்டு, உயர்ந்த நிலைக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்துவிட்டார். இவரை அந்தப் புனித ஆத்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது.</p><p><br></p><p>இந்த திடீர் அரசியல் மாற்றத்தால் தூத்துக்குடி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் மத்தியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு, அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக ஏசாதுரை தெரிவித்துள்ளார்.</p>