<p><b>புதியம்புத்தூர் ஊராட்சி தூய்மை காவலரின் மகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.</b></p><p><br></p><p>தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்குத் தேர்வு முடிவுகள் நேற்று ( மே16 ) காலை 9 மணியளவில் வெளியானது.</p><p><br></p><p>மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,71,239. இதில், மாணவிகள்&nbsp; 4,35,119, மாணவர்கள் 4,36,120 ஆகும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 8,17,261 ( 95.03 சதவீதம் ).</p><p><br></p><p>இதில், மாணவிகள் 4.17,183 (95.88 சதவீதம் ) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00,078 ( 91.74 சதவீதம் ) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட 4.14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.</p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308&nbsp; பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><br></p><p>மாணவர்கள் 95.36 சதவீதமும், மாணவிகள் 98.07 சதவீதமும் என மொத்தத்தில் 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><br></p><p>அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 96.76 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 3 வது இடத்தையும், அரசு பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 95.40 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 5 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.</p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர். 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.</p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.</p><p><br></p><p>கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் ராஜேஸ்வரி பாராட்டினார்.&nbsp;</p><p><br></p><p>புதியம்புத்தூர் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிந்து வரும் முத்துக்குமார் - டெய்லராக வேலை பார்த்து வரும் முத்துலட்சுமி ஆகியோரது மகளான ரேஷ்மா மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.</p><p><br></p><p>பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உதவியுடன் படித்ததால் தான் 498 மதிப்பெண்கள் பெற முடிந்தது. டாக்டராவது எனது கனவு என்கிறார் மாணவி ரேஷ்மா.</p>