<p><b>தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2025ஆம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது” பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை பொன்னி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வாழ்த்து தெரிவித்தார்.&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தலைமையில் இன்று திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம்&nbsp; நடைபெற்றது.</p><p><br></p><p>இதில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 750 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.&nbsp;</p><p><br></p><p>பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 54 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை&nbsp; கேட்டறிந்தார்.</p><p><br></p><p>பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 15.04.2025 அன்று தலைமைச் செயலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது” தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி அவர்களுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சியரிடம் அவ்விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.</p><p><br></p><p>அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 1747 பயனாளிகளுக்கு ரூ.63,50,000/-க்கான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்களையும் ஆட்சியர் வழங்கினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/04/21/11745236372.jpg" style="width: 100%;"><br></p><p>மேலும், கேரள மாநிலத்தில் நடைபெற்ற 26 வது இந்திய அளவிலான காது கேளாதோருக்கான பிரிவில் குண்டு எரிதல் போட்டியில் தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த வ.உ.சி கல்லூரி மாணவி பிரித்தி சிவ பிச்சம்மாள் வெள்ளி பதக்கமும், ஹரியானாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கமும், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் குண்டு எரிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.</p><p><br></p><p>இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட விளையாட்டு அலுவலர்/இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>