<p><b>தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</b></p><p><br></p><p>அதன்படி, இன்று 18.12.2024 புதன்கிழமை கிழக்கு மண்டல அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.&nbsp;</p><p><br></p><p><b style="color: rgb(156, 0, 0);">அப்போது பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி</b>, "தூத்துக்குடியில் கடந்த 12,13,14ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தூத்துக்குடி மாநகரில் பெரிய அளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக நகருக்குள் மழை வெள்ளம் வருவதை தடுத்து மடத்தூர் கோக்கூர் கண்மாய், கோரம்பள்ளம் குளம், உப்பாற்று ஓடை வழியாக கடலுக்குள் தண்ணீர் திருப்பி அனுப்பப்பட்டது.&nbsp;</p><p><br></p><p>தூத்துக்குடி அய்யனடைப்பில் உள்ள செங்குளம் நிரம்பி உபரி நீர் சோரீஸ்புரம், அய்யனடைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் மேற்கு பகுதிகளான தபால் தந்தி காலனி, ஆசீர்வாத நகர், செல்வ காமாட்சி நகர், ராஜீவ் நகர், பால்பாண்டி நகர், கதிர்வேல் நகர், முருகேசன் நகர், ராஜபாண்டி நகர், ஆசிரியர் காலனி, கோக்கூர், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது இருப்பினும் மின் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. சில இடங்களில் காவல்வாய்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் அடைத்து நின்றதால் தண்ணீர் செல்ல முடியவில்லை.&nbsp;</p><p><br></p><p>மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் துரிதமாக கஷ்டப்பட்டு அவற்றை அகற்றி தண்ணீர் செல்ல வழி வகுத்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாநகரக்குள் தெருக்களின் தேங்கி நின்ற தண்ணீர்கள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு உள்ளது. அதே போல் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து 12 கி.மீ தூரம் பைபாஸ் வழியாக கடலுக்கு செல்லும் உப்பாற்று ஓடை தூர்வாரப்பட்டு அகலப்படுதப்பட்டதால் நீர் வெளியேற்றப்பட்டு எளிதாக கடலுக்கு சென்றது.</p><p><br></p><p>மேலும் தூத்துக்குடியில் தனிநபர்களின் காலியிடங்களில் 30 சதவீதம் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்டப்டு வருகிறது. மேலும் காலி மனைகளில் நீரை அகற்றவும் அதன் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இவ்வாறு மேயர் பேசினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை தீர்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.</p><p><br></p><p>இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் சரவணகுமார், துணை மாநகர பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல ஆணையர் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமச்சந்திரன், இரவின் ஜெபராஜ், சுகாதார அலுவலர் நெடுமாறன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஏடிண்டா, சரண்யா, மும்தாஜ், ரீக்டா ஆர்தர், ராம், தனலட்சுமி, பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, வட்டச் செயலாளர் கதிரேசன், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>