<p><b>தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழியை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</b><br></p><p>நேற்று கன்னியாக்குமரி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தூத்துக்குடி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் மு. க.ஸ்டாலின், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, தூத்துக்குடி தமிழ்சாலை வழியாக வந்து, தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கனி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து, காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/03/26/11711430824.jpg" style="width: 100%;"><br></p><p>பின்னர், வாகனம் மூலம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வழியாக சென்று தூத்துக்குடி லையன்ஸ் டவுண் பகுதியில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.&nbsp;</p><p>தொடர்ந்து, லயன்ஸ் டவுண் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர், வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். பின்னர், தூத்துக்குடி மாநகர பகுதி முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி தமிழக முதல்வர் கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/03/26/11711430852.jpg" style="width: 100%;"><br></p><p>முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ராஜாஜி பூங்காவில் காலை நடைபயிற்சி மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மக்கள் அதிகம் கூடக்கூடிய&nbsp; காய்கனி மார்கெட்டில் இறங்கி வாக்கு சேகரித்தது, தூத்துக்குடியில் குறிப்பிட்ட அளவு மிகப்பெரிய வாக்கு வங்கியாக திகழும் மீனவர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய லயன்ஸ் டவுண் பகுதியில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தது, மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தியது என காலையிலேயே பரபரப்பு தேர்தல் அரசியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.</p>