<p><b>தூத்துக்குடியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.</b><br></p><p>தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த கடத்தலை தடுக்கும் வகையில், தமிழக போலீசார், கடலோர காவல் படையினர், உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்த நிலையில், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ், இசக்கி, பழனி, ஆகியோர் வேம்பார் கடற்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்&nbsp;</p><p>அப்போது கடற்கரை நோக்கி வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில்&nbsp; 1250 கிலோ பீடி இலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த பீடி இலைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதும் தெரியவந்தது.&nbsp; &nbsp;இதையடுத்து பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.&nbsp;</p><p>மேலும், இது தொடர்பாக மணக்கரை கீழூர் கல்லத்தியான் மகன் சரவணன் (23),&nbsp; சடையன்&nbsp; மகன் மாரியப்பன் (38), பாளையங்கோட்டை சாந்திநகர் சவரிமுத்து மகன் லூர்து அந்தோணி (41), பாளையங்கோட்டை கம்பராமாயண தெரு முருகேசன் மகன் முத்துக்குமார் (38), திருநெல்வேலி நொச்சிகுளம் வெயிலுமுத்து மகன் செந்தூர் (20),&nbsp; சண்முகம் மகன் சிவபெருமாள் (40) ஆகிய 6பேரை போலீசார் கைது செய்தனர்.&nbsp;</p>