<p><b>புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.</b></p><p>தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டை ஒன்றிய வட்டார அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக ( பாஸ்கரன்) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் லஞ்சம், ஊழல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம், கல்வித்துறை விதிகளை மதிக்காமை ஆகிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கலை உடையார் தலைமையில் மாவட்ட துணை தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணி ராஜ், கல்வி மாவட்ட தலைவர் குணசேகரன், கல்வி மாவட்ட செயலாளர் எபனேசர் ஆகியோரது முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.</p><p><b>அப்போது மாவட்ட செயலாளர்&nbsp; செல்வராஜ்&nbsp;</b><b>கூறுகையில்</b>, தமிழக அரசு மாணவர்களுக்கு பள்ளி பாட புத்தகம், நோட், காலணிகள் புத்தக பை போன்ற விலையில்லாப் பொருட்களை பள்ளிகளில் நேரடியாக கொண்டு சென்று வழங்க ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலகத்திற்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தூத்துக்குடி ஊரக வட்டாரகல்வி அலுவலர் அவ்வாறு வழங்காமல் தலைமை ஆசிரியர்களை அவர்களது சொந்த செலவில் எடுத்து செல்ல வைத்துள்ளார். இதன் மூலம் 4 ஆண்டுகளாக அரசு ஒதுக்கீடு செய்த நிதியைக் கையாடல் செய்துள்ளதாகவும், உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் கோரிய ஒவ்வொரு ஆசிரியரிடமும் பல்லாயிரக்கணக்கில் இலஞ்சம் பெற்றே அனுமதித்ததாகவும் ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை அனுமதிக்க மறுத்து விட்ட நிலையில் ஊக்க ஊதியம் பெற இயலாத நிலை ஏற்பட்டு விட்டது.</p><p>இந்நிலையில் 36 ஆசிரியர்களிடமும் ஊக்க ஊதியம் பெற அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறி தலா ரூ.10,000 வீதம் வசூல் வேட்டை நடத்தினர் எனவே பாஸ்கரன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.</p><p>இப்போராட்டத்தில் மாநில செயலாளர் பிரம்மநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் அந்தோணி சார்லஸ், ஆனந்தி மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில அமைப்புச் செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் ஜெயசீலி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>