<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடி அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் அவரது தம்பி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</b><br></p></div><div align="left"><p dir="ltr">தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு பகுதியில் நடந்து சென்ற நபரிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டதாக முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று வழிப்பறியில் ஈடுபட்ட 5பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.</p></div><div align="left"><p dir="ltr">அப்போது பிடிப்பட்ட ஒருவரின் செல்போனை சோதனையிட்டபோது, அவர் தனது பிறந்தநாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த போத்தா ரவி மகன் பானா வேல்முருகன் (வயது 29) என்பது தெரியவந்தது. இதற்கு உதவியாக இருந்த அவருடைய தம்பி மாரிச்செல்வம் (23), அவரது நண்பர்களான தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த கிருஷ்ண சுயம்பு மகன் இசக்கி செல்வம் (26), தாளமுத்து நகரை சேர்ந்த ராமன் மகன் டைட்டஸ் (21), முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கௌதம் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.<br> </p> </div><p> </p><div align="left"><p dir="ltr"><br> </p></div>