
திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் கண்ணன். இவர் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக நேற்று முன்தினம் சோனகன்விளை அருகே உள்ள நீல்புரம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது, அப்பகுதியை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் கல்கண்டு என்ற ஜெபராஜின் (58) இரு சக்கர வாகனத்தின் மீது கண்ணனின் லோடு ஆட்டோ உரசியது.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஜெபராஜ் கண்ணனை தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து கேட்பதற்காக நேற்று இரவு கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் நீல்புரத்திற்கு சென்று ஜெபராஜிடம் பேசி கொண்டிருந்தார். அப்பொழுது தகராறு ஏற்பட்டு ஜெபராஜ் தாக்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவரைப் பார்ப்பதற்காக ஜெபராஜ் மகன் நவீன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நின்றுள்ளார்.
அப்போது, அங்கு நவீன் தனது ஆதரவாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அரிவாள், கம்பு, கட்டை மற்றும் கல் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர்.
இதில், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கந்தவேல் (21), திருச்செந்தூரைச் சேர்ந்த கங்கைமுத்து மகன் நட்டார்ஆனந்த் (20), ஆண்ட்ரூஸ் நவீன் (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் வெட்டும், அப்பகுதியில் உணவு வாங்குவதற்காக வந்திருந்த தூத்துக்குடியை சேர்ந்த செந்தில்குமார் மகன் விஜய பிரகாஷ் (27) என்பவரது வலது காலில் வெட்டு காயங்களுடனும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.