
தாமிரபரணி தடுப்பணைக்கு குளிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் விஜய் ( 20 ). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் கல்லூரி நண்பர்கள் உள்ளிட்டோரும் நேற்று ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தாமிரபரணி தடுப்பணைக்குச் சென்று குளித்துள்ளனர்.
அப்போது நீச்சல் தெரியாத விஜய் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜய்யை காப்பாற்ற முயன்று தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜய்யின் குடும்பத்தார் ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி, உதவி ஆய்வாளர் தாமஸ் டேனியல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் மதியம் முதல் தேடி மாலையில் விஜயின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
போலீசார் விஜய்யின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.