
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு 3 வருடம் மற்றும் 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் மொத்தம் ரூபாய் 11,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி மறவன்மடம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் ஜெபராஜ் (27), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் சூரியராஜன் (34) மற்றும் தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜோசுவாராஜ் (25) ஆகிய மூவரையும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் இன்று (08.04.2025) குற்றவாளிகளான ஜெபராஜ் மற்றும் சூரியராஜன் ஆகிய இருவருக்கும் 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூபாய் 2,000/- அபராதமும், குற்றவாளி ஜோசுவாராஜ் என்பவருக்கு 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 7,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் முத்துலட்சுமி, வனிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபீலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.