
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உச்சரிக்கும் திமுக ஆட்சியிலேயே தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தின் அஜண்டாவில் இரண்டு தீர்மானங்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்றதோடு, மாநகராட்சியின் குடிநீர், பாதாளசாக்கடை வரி உயர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று ( மார்ச் 28 ) காலை 10.30 மணியளவில் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில் 12 மணி வரையிலும் கூட்டத்தொடர் தொடங்காததால் மாநகராட்சி கூட்ட அரங்கம் 10 மணி முதல் பரப்பாகவே காணப்பட்டது.
இந்நிலையில், பின்னர் பரபரப்பாக நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், குடிதண்ணீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றிற்கான வரிகளை கடுமையாக உயர்த்தி தீர்மானம் வைக்கப்பட்டு இருந்ததால், இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்ததால் மாமன்ற கூட்டம் இன்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போனது.
ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் தொழில்வரி பல மடங்கு உயர்த்தப்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் மாநகராட்சி கூட்டத்தில் சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வரிகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்பதை முன் நிறுத்தி, அதிமுக மாமன்ற எதிர்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் அதிரடியாக வெளிநடப்பு செய்தனர்.
அதோடு இல்லாமல், அதிமுகவை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வரி உயர்வு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்தனர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளே திமுக மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலான மாமன்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க மறுத்து, மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தூத்துக்குடி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நான் பெரிய அளவில் ஆங்கில மொழி தெரியும்படியான கல்வி அறிவு பெறவில்லை. இப்படி இருக்க 4, 5 வது தீர்மானம் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி ஆங்கில மொழியில் தீர்மானம் இடம் பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சியின் மூத்த மாமன்ற உறுப்பினருமான சந்திரபோஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தலைமையில் கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, ஜெயராணி, பத்மாவதி, வெற்றி செல்வன் ஆகிய 5 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பக கனி ஆகிய 3 பேரும், சிபிஎம் சார்பில் தனலட்சுமி, சிபிஐ சார்பில் முத்துமாரி என மொத்தம் பத்து கவுன்சிலர்கள் அதிரடியாக வெளிநடப்பு செய்தனர்.