
விளாத்திகுளம் அருகே போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தலைமறைவான நிலையில் அவருக்கு ஜாமீன் கையெழுத்திட்ட இருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் மணிவண்ணன்(27). இவர், போக்சோ வழக்கில் மாசார்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு ஜாமீன் வழங்குவதற்காக அவரது உறவினர்கள் திவ்யா மற்றும் முனியம்மாள் ஆகிய இருவர் கையெழுத்திட்டனர். அதன் பேரில் ஜாமீனில் வந்த மணிவண்ணன், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாராம்.
இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாசார்பட்டி போலீசார் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்பேரில், நீதிபதி சுரேஷ், ஜாமீன்தாரர்கள் 2 பேருக்கும் தலா 15 நாள்கள் சிறை தண்டனை அல்லது தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினர். இதனையடுத்து, அவர்கள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.