
தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் மகன் வினோத்குமார் ( 30 ).
கூலித்தொழிலாளி இவர், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அடிக்கடி படுத்துக் கொள்வாராம். நேற்று மாலையில் வழக்கம் போல் துணை மின் நிலைய வளாகத்திற்குள் சென்ற வினோத்குமார் அங்குள்ள மின்மாற்றி மீது ஏறினாராம். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து வினோத்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் உடலை வடபாகம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் அவர் மின்மாற்றி மீது ஏறினாரா? அல்லது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின்மாற்றியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வினோத்குமாரின் உடலை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டதால், தூத்துக்குடி நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டது.