
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 10 சிப்காட் தொழிற்பூங்கா உருவாவதற்கான பெருமை அரசிற்கு கிடைக்கவுள்ளது என தொழில்துறை அமைச்சர் ராஜா கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் சட்டபேரவை விவாதத்தில் போது, "குலசேகர பட்டினம் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள எழுவரைமுக்கி ஊராட்சி மற்றும் அதனை சுற்றி 800 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இங்கு ராக்கெட் மற்றும் அனல் மின் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 11,000 டன் வாழை விளைகிறது. இவற்றை பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழிற்சாலையை அமைத்து தரவேண்டும். என தெரிவித்தார்.
அதற்கு தொழில்துறை அமைச்சர் ராஜா பதிலளித்து பேசுகையில்:-
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை அற்புதமான சாலை, ரயில்வசதி உள்ளது. மிக முக்கியமாக துறைமுகம் வசதியும் உள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. இங்கு 3,800 ஏக்கரில் அமைந்துள்ள 4 சிப்காட் தொழிற்பேட்டைகளில் 108 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
புதிய சிப்காப்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள இடம் பிரதான சாலையில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. சாத்தியூகூறுகள் ஆய்வு செய்யப்பட்டு, சாதகமான சூழல் வரும்பட்சத்தில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்படும்.
தூத்துக்குடியை பொறுத்தவரை 4 சிப்காட் ஏற்கனவே உள்ளது. 3 புதிய சிப்காட்டிற்கு 5,000 ஏக்கரில் நிலம் எடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. மேலும் 3 சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் உத்சேதம் உள்ளது. எனவே, தூத்துக்குடியில் மட்டும் 10 சிப்காட் தொழில்பூங்கா உருவாக்கும் வாய்ப்பு இந்த அரசிற்கு கிடைக்கும்.
தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய நிறுவனம் நடப்பாண்டிற்குள் தொழிற்சாலையை துவங்கும். அதன் வாயிலாக ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும். வாழை அதிகம் உற்பத்தியாகும் பட்சத்தில், அங்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.இவ்வாறு கூறினார்.