
எட்டயபுரம் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 7,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சாலையில் நின்று கொண்டிருந்த 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்யும் எண்ணத்தோடு குழந்தையை கடத்தி கையும் களவுமாக பிடிப்பட்ட வழக்கில் எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (26) என்பவரை எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் குழந்தை கடத்தல் சட்டபிரிவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி சுரேஷ் நேற்று (18.03.2025) குற்றவாளியான சுஜிவன் (எ) சந்தோஷ் என்பவருக்கு குழந்தை கடத்தல் குற்றத்திற்காகவும், போக்சோ குற்றத்திற்காகவும் 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து அதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டும் ரூபாய் 7000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய எட்டயபுரம் (பொறுப்பு) காவல் ஆய்வாளர் இளவரசு மற்றும் அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர் சங்கரகோமதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.