
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எட்டப்பன் மகன் கருப்பசாமி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவனம்மாள். இந்த தம்பதிக்கு கதிரவன் என்ற மகனும், எழிலரசி என்ற மகளும் உள்ளனர்.
கதிரவன் அங்குள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், எழிலரசி அதே பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். சிறுநீரக பிரச்சனை காரணமாக கருப்பசாமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ( மார்ச் 5 ) இரவு உயிரிழந்தார்.
தற்போது 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் , தந்தை இறந்த சோகத்திலும் கதிரவன் இன்று ஆங்கில தேர்வு எழுதினர். தேர்வு எழுதி விட்டு பள்ளி விட்டு வீட்டிற்கு கதிரவன் வந்தபோது தங்கை எழிலரசி அண்ணனை ஓடி சென்று கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்ணை கலங்க வைத்துள்ளது.
குழந்தைகளுக்கு கல்வி தான் முக்கியம் என்று கருப்பசாமி அடிக்கடி கூறி வந்த நிலையில் அவர் இறந்த நிலையிலும் அந்த சோகத்தை பொறுத்துக் கொண்டு அவரது மகன் தேர்வு எழுதியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.