
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கிளாரன்ஸ். குடும்ப வறுமையாலும், அன்றைய கால சூழலாலும் நடுநிலையை பள்ளி படிப்பை கூட தாண்டாமல் தனது கல்வியை முடக்கிக் கொண்டார். தற்போது கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இப்படி தனக்கான அடையாளத்தை மிக எளிமையாக சுறுக்கிக்கொள்ளும் இந்த மீனவ இளைஞர் கிளாரன்ஸ் தூத்துக்குடியில் சத்தமில்லாமல் செய்து வரும் சமூக சேவையை தற்போது யூத் உலக சாதனை புத்தகம் நிறுவனம் பாராட்டி அங்கீகரித்து சிறப்பித்துள்ளது. இது கிளாரன்சின் சேவைக்கு மட்டும் அல்ல அவரை ஈன்றெடுத்த தூத்துக்குடி மண்ணுக்கும் கடல் தாய்கும் பெருமையே.
கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்றோர், சாலையில் திரிந்த நாய் உள்ளிட்ட வாயில்லா ஜீவன்கள், இரவு பகலாக கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களுக்கு அரணாக நின்ற காவலர்கள் என பல்வேறு தரப்பினருக்கு உணவு வழங்கி சேவை செய்ததில் தொடங்கி, இன்றளவும் முதியோர் இல்லங்களுக்கு தேவையான உபகரணங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தை இல்லங்களுக்கு தேவையான உதவிகள் என பல தேவைகளை தங்களால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறார். அதோடு தன்னிடம் நேரடியாக வருபவர்கள் என்றில்லாமல் தனது கவனத்திற்கு வரக்கூடிய தேவை உள்ள அனைவருக்கும் இரத்த தானம் செய்து வருகிறார்.
இப்படி பல்வேறு சமூக சேவைகளை செய்ய கிளாரன்சின் ஒருவரின் கையோடு பல கரங்களை இணைத்து பலம் சேர்த்து கூடுதல் சேவைகளை, கூடுதலானோருக்கு செய்யும் விதமாக மீனவன் மக்கள் சேவை அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தற்போது அதற்கு மேலும் புத்துயிர் கொடுத்து MMS TRUST என்ற பெயரில் மாற்றம் கண்டு தங்களது சேவையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருகிறது கிளாரன்ஸ்.
இந்த நிலையில் தான், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வீதம் தொடர்ந்து 100 நாட்கள் என 300 மணி நேரம் சமூக சேவை செய்தமைக்காக யூத் உலக சாதனை புத்தகம் நிறுவனம் தூத்துக்குடி மீனவ இளைஞர் கிளாரன்ஸ்கு விருது வழங்கி பாராட்டி உள்ளது. இந்த விருதை பெற்ற அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.