
திருச்செந்தூர் கோயிலுக்கு சாலை மார்க்கமாக வரும் பக்தர்களை புலம்ப வைக்கும் வகையில் காணப்படும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைக்கு விமோசனம் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையேயான சாலையும் ஒன்றாகும். சுமார் 40 கி.மீ. தூரம் கொண்ட இச்சாலையை, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடி வழியே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாலை மார்க்கமாக வாகனங்களில் பக்தர்கள் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர்.
மேலும், இந்த சாலையில் கெமிக்கல் தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, மத்திய அரசின் கனநீர் தொழிற்சாலை, அணு சக்தி துறைக்கு சொந்தமான ஜிர்கோனியம் தொழிற்சாலை போன்ற முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும், கடந்த 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சாலையின் பல இடங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி முதல் முக்காணி வரை சாலையின் நிலை மிகவும் மோசமாக பரிதாபகரமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் முருக பக்தர்கள், வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். இந்த சாலையை விரைவாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சாலையோர கிராமங்களில் வாழும் மக்கள், வாகன ஓட்டிகள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் கட்டமாக தூத்துக்குடி முதல் முக்காணி வரை 17 கி.மீ., தொலைவுக்கு சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடியில் இருந்து 17 கி.மீ., தொலைவுக்கு சீரமைக்க ரூ.22.40 கோடிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப் பட்டது. தற்போது ஒப்பந்தபுள்ளி திறக்கப்பட்டு, சென்னையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் ஆணையத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் 10 நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் அளித்ததும் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைக்கு விமோசனம் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி சேர்ந்த பொன்காந்திமதிநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரையிலான 40 கி. மீட்டர் தூர இருவழிச் சாலையை சீரமைத்து புதுப்பிக்க உத்தரவிட கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்து, அதன் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.