
தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்தநாள் விழா திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள ஓபிஆர் மணிமண்டப வளாகத்தில் நேற்று நடந்தது.
திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் அரங்கத்தில் நடந்த இவ்விழாவை தென்னிந்திய ரெட்டி நலச்சங்க தலைவர் முத்துமல்லா, தொழிலதிபர் ராஜ்மோகன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சென்னை முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இளைஞர் அணி மாநில தலைவர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். மாநிலத் தலைவர் ரவி ரெட்டியார் சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில், திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஓபிஆர் பெயரை சூட்ட வேண்டும். ரெட்டி இன மக்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஓபிஆர் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். பொதுவாழ்வு மற்றும் அரசு பணிகளில் சிறப்பாக செயல்படுவோருக்கு ஓபிஆர் பெயரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச் செயலாளர் ராஜா பூர்ண சந்திரன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநில பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார். இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநில தலைவர் ரவி ரெட்டியாருக்கு, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர்பு நிர்வாகி ராமச்சந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.