
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பேசியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. பூங்காங்களில் உடைந்த விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்படும். பணி ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் சேமநல நிதி வழங்கப்படும்.
கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பராமரிப்பின்றி கைவிடப்படும் நிலையில் இருந்தது, தற்போது அது சீர் செய்யப்பட்டு நன்னீராக்கி விநியோகம் செய்யும் அளவுக்கு வந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தால் கொசுத் தொல்லை குறைந்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் பொதுவெளியில் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்கு பராமரிப்புக்கு இந்த கூட்டத்திலயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெருவிளக்கு பிரச்சனைகள் உடனுக்குடன் சரி செய்யப்படும் என்றார்.
மேலும், உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, சந்திரபோஸ், ராமகிருஷ்ணன் ஆகியோரின் கேள்விக்கு பதிலளித்த மேயர், "பிரதான சாலைகளில் உள்ள குடிநீர் குழாகள்களில் உடைப்புகளை சரி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. உறுப்பினர்களே முன்வந்து உடைந்த குழாய்களை சரி செய்தால் மாநகராட்சியில் இருந்து நிதி அளிக்கப்படும். சி.வ.பள்ளி, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குவதாக கூறுகிறீர்கள். அனைத்தையும் மாநகராட்சியே செய்து வருகிறது என்றார்.
கூட்டத்தில் நகராட்சியாக இருந்தபோது பணிபுரிந்த ஊழியர்களுக்கு சேமநல நிதி கொடுப்பது, தெருவிளக்கு பராமரிப்பு, பேருந்து நிலைய கடைகள், விளம்பர பதாகைகள் ஏலமிடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.