
தாளமுத்துநகர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2 தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக தாளமுத்துநகர் பாக்கியநாதன்விளை பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மாரிமுத்து (52) என்பவரை கொலை செய்த வழக்கில் மேற்படி இறந்துபோன மாரிமுத்துவின் மருமகனான திருநெல்வேலி பாபநாசம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் காளிராஜ் (49) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் -2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத்தா இன்று (21.01.2025) குற்றவாளியான காளிராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் தங்ககிருஷ்ணன், சார்லஸ் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் சிவன்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.