
விபத்தில் மூளைச் சாவு அடைந்த புதியம்புத்தூர் இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துரைச் மேலமடத்தைச் சேர்ந்த ஆத்திமுத்து என்பவரது மகன் தனசிங் ( 21). இவர் விபத்து காரணமாக மூளைச் சாவடைந்தநிலையில், இவரது உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தாமாக முன்வந்து தானம் செய்ய முன்வந்தனர்.
இதனையடுத்து, தனசிங்கின் உடல் உறுப்புக்களான கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் போன்றவை வெவ்வேறு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி கல்லீரல் திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், இரண்டு கண்களும் திருநெல்வேலி அரவிந்த் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்த தனசிங்கின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் உறுப்பு தானம் செய்தவரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த தனசிங்கின் உடலுக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.