
திருச்செந்தூர் டிபி ரோட்டில் உள்ள ஆனந்த விநாயகர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி பிச்சம்மாள் ( 77 ). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்த போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிச்சம்மாள் வீட்டு வாசலில் நின்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். பிச்சம்மாள் வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
பிச்சம்மாள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த வாலிபர் சிறிது நேரம் கழித்து காலி பாட்டிலுடன் மீண்டும் வந்து தண்ணீர் கேட்டுள்ளார். பிச்சம்மாள் பாட்டிலை வாங்கிக்கொண்டு தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபரும் பிச்சமாளின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அவரை தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக தப்பி சென்று விட்டடார்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்து, காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.