
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வருகிறார். அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையில், நியோ டைடல் பார்க் அமைந்துள்ள பகுதியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் அருண் குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.