• vilasalnews@gmail.com

இந்திய சுதந்திர போராட்டம் வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்!

  • Share on

இந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் அழகுமுத்துக்கோன் நலச்சங்க நிர்வாகிகள், வீரர் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரர்கள், தமிழக யாதவ இயக்க கூட்டமைப்பினர் மற்றும் விழா பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் சுகாதேவி, பிரேமா, உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், செந்தில் வேல் முருகன், சிவராஜா, காசிலிங்கம், அருள் சாம்ராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், ஒன்றியச் செயலர்கள் வண்டானம் கருப்பசாமி (அதிமுக), ராதாகிருஷ்ணன் (திமுக), ஒன்றிய கவுன்சிலர் ராமர், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தம்பா, வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி, செயலர் முத்துகிருஷ்ணன்,  துணைச் செயலர் குமார், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரர்களான ராணி உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

விழா கொண்டாடப்படும் கிராமங்களில் விழா பொறுப்பாளர்கள் காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். விழா சம்பந்தமாக பேனர்கள். பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுமதியுடன் வைக்கப்பட்ட பேனர்களை அவரவர்களே அகற்றிவிட வேண்டும். இருச்சக்கர வாகனங்களில் வருவதற்கும், ஜோதி எடுத்துச் செல்வதற்கும் அனுமதி கிடையாது.


விழாவிற்கு வரும் வாகனங்கள் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கட்டாலங்குளம் விலக்கு சரவணபவன் ஹோட்டல் அருகில் உள்ள ஆர்ச் வழியாக கட்டாலங்குளம் செல்ல வேண்டும். விழா முடிந்து வெளியே செல்லும் போது, செட்டிக்குறிச்சி ஜங்ஷனில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோவில்பட்டி மார்க்கமாக செல்பவர்கள் தெற்கு நோக்கி கயத்தாறு வழியாகவும், சங்கரன்கோவில், தென்காசி மார்க்கமாக செல்பவர்கள் மேற்கு நோக்கி கழுகுமலை வழியாகவும் செல்ல வேண்டும்.

விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்கள் 3 வாகனங்களுக்கு மேல் தொடர்ச்சியாக செல்லக் கூடாது. மேலும் உரிய அனுமதிச் சீட்டு மற்றும் வாகனங்களின் ஆவணங்களுடன் வர வேண்டும். விழாவில் கலந்து கொள்ள வருபவர்கள் வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ, தொங்கிக் கொண்டோ வரக் கூடாது. சொந்த வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களின் மேற்கூரையில் உள்ள கேரியர்களை அகற்றிவிட்டு விழாவிற்கு வர வேண்டும். விழாவிற்கு வரும் வாகனங்கள் காவல் துறை அனுமதித்துள்ள வழித்தடத்தில் தான் சென்று திரும்ப வேண்டும். அனுமதி பெற வரும் போது என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கிறது என்றும், எந்தந்த அமைப்பாளர்கள் எத்தனை மணிக்கு கலந்து கொள்ள போகிறீர்கள்? என்றும் விளக்கமாக தெரிவித்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம், அனுமதி பெறப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் நடத்திக் கொள்ள விழா கமிட்டியார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

விழாவின் போது பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. புதிதாக எந்த நிகழ்ச்சிக்கும் நடத்த அனுமதி கிடையாது. நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ குழாய் பயன்படுத்த அனுமதி கிடையாது. ஒலிபெருக்கியில் மாற்று சமுதாயத்தினரை விமர்சித்தோ, தனிநபர்களை குறித்தோ, விமர்சித்தோ, பாடல்கள், ஒலிநாடாக்கள், வசனங்கள், பேச்சுக்கள் ஒலிபரப்பக் கூடாது. விழாவிற்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி முதல் கட்டாலங்குளம் கிராமம் வரை சிறப்பு அரசுப் பேருந்து இயக்கப்படும். சொந்த வாகனம் இல்லாத கிராம மக்கள் விழாவில் கலந்து கொள்ள நினைத்தால் முன்கூட்டியே நிலையத்தில் மனு கொடுத்து எத்தனை நபர்கள்? எந்த நேரத்திற்கு கிளம்புவார்? என்ற விவரத்துடன் தெரிவித்தால் அந்த கிராமத்திற்கு சிறப்பு அரசுப் பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

நிகழ்ச்சிகளை சுமூகமாகவும், சிறப்பாகவும் நடத்தி முடித்து விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

  • Share on

சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கொடை விழா!

மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி மீனவா் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on