• vilasalnews@gmail.com

கோவில்பட்டி : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோரிக்கைகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதில்!

  • Share on

கோவில்பட்டி ரயில் நிலையம் தொடர்பாக   முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வைத்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது பெரிய நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, விவசாயம், நூற்பாலை , கடலை மிட்டாய் , ஆயத்த ஆடை தயாரிப்பு என பல்வேறு தொழில் அம்சங்களைக் கொண்ட நகரம்,  நாள்தோறும் தொழில் சம்பந்தமாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலரும் வந்து செல்லும் நகரமாக உள்ளது. 

கோவில்பட்டி நகருக்கு வரக்கூடிய பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் மதுரை ரயில்வே மண்டலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய ரயில்வே நிலையங்களில் கோவில்பட்டியும் ஒன்று. 

ஆனால் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவு மற்றும் கொரோனாவிற்கு பின்னர் சில ரெயில்கள் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்லாத நிலை இருந்தது.  இது குறித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்களின்  வேண்டுகோளை தொடர்ந்து  முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ டெல்லியில் கடந்த மாதம் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை சந்தித்து கோவில்பட்டி மற்றும் கடம்பூர் ரெயில்வே நிலையத்தில் சில ரெயில்கள் நிற்கமால் செல்லும் நிலை உள்ளதால் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,

கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் 2வது நடைமேடையில் மேற்கூடை அமைக்க வேண்டும், மின்தூக்கி மற்றும் எக்ஸ்லேட்டர் அமைக்க வேண்டும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார் வழங்க வேண்டும்.

கோவில்பட்டி லெட்சுமி மில் முதல் இளையரசனேந்தல் சுரங்கபாதை வரை ரெயில்வே பாதைக்கு இணையாக புதிய சர்வீஸ் சாலை மற்றும் சுரங்கபாதை நடைபாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வைத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும்  வகையில்  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பதி வெட்டிக்கொலை!

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாத திருவிழா தரிசன நேரத்தை மாற்ற பாஜக எதிர்ப்பு!

  • Share on