![](https://www.vilasalnews.com/img/post/thumbimage/2021/12/29/1640783228.jpg)
உடன்குடியில் நூதன முறையில் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது உடன்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடன்குடி அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஒருவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் லாரிக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊருக்கு வந்துஉள்ளார். பின்பு நெல்லையில் ஒரு ஜவுளிக்கடையில் குடும்பத்துடன் சென்று கிறிஸ்துமஸ் புத்தாண்டு தூணிகளை வாங்கியுள்ளார்.
சம்பவத்தன்று இவரது செல்போனில் பெண் குரலில் பேசிய ஒருவர், நீங்கள் புதியதாக ஜவுளிகள் வாங்கியதால் உங்களுக்கு 2022-ஆம் ஆண்டு புத்தாண்டு பம்பர் பரிசாக ரூ.10 ஆயரம் கிடைத்து உள்ளது. அதை உங்கள் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு, உங்கள் வங்கி கணக்கு சம்பந்தமான விபரத்தை சொல்லுங்கள் என்று பேசியிருக்கிறார். இதை நம்பிய தொழிலாளி வங்கிக் கணக்கு மற்றும் வங்கி கணக்கு விபரத்தை முழுதுமாக சொல்லியுள்ளார்.
சிறிது நேரத்தில்அவரது வங்கி கணக்கில் இருந்த ரு.2 ஆயிரம் எடுத்ததாக செல்போனுக்கு தகவல் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளி உடன்குடியில் உள்ள வங்கி கிளைக்கு சென்று விவரம் கேட்டபோது, வங்கியில் உள்ளவர்கள் நாங்கள் எந்த விபரமும் கேட்பதில்லை, கேட்டாலும் சொல்லக்கூடாது நேரில்தான் வர சொல்வோம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மர்மநபர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 ஆயிரத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் உடன்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.