
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றது.
அதில் குறிப்பாக அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். விரைவில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கூறி இருந்தார். இதனால் தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது,
"மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிமை தொகை மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும்" என எம்எல்ஏ தங்கமணி கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்:-
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்றாலும் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெறலாம் என்ற விதிவிலக்கு உள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெரும் குடும்பத்தில் உள்ள மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என தெரிவித்தார். இதனால் மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பத்திற்கு 1500 ரூபாய் வழக்கமான உதவித் தொகையுடன் மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.