• vilasalnews@gmail.com

அதிகாரப்பூர்வமாகஅறிவித்தார் விஜய்.. தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு தேதியை!

  • Share on

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சிக் கொள்கைகளை அறிவிக்க நடிகர் விஜய் திட்டமிட்டிருந்தார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கிய நிலையில், அந்தக் கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கினார்.

அதனையடுத்து, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே...

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும், நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ந் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

விரைவில் சந்திப்போம்!!

வாகை சூடுவோம்!!"

என, நடிகர் விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

  • Share on

இது செப்டம்பரா? இல்ல மே மாதமா?

  • Share on