• vilasalnews@gmail.com

தமிழ்நாட்டில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம் - முதல்வர் பழனிசாமி

  • Share on

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று , அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது . இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து உலகளாவிய ஒற்றுமை , பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்  ஆகும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசால் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக , தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் சதவிகிதம் 2010-11ஆம் ஆண்டு 0.38 சதவிகிதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு 0.18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது . 

மேலும் , புதிய எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய 3161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன . அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . 

அத்துடன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் , 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன . எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது . 

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உயரிய நோக்கில் , மாண்புமிகு அம்மாவின் அரசு அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ .1000 / - ஓய்வூதியம் வழங்குதல் , எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் , எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . 

மேலும் , எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு , சிகிச்சை ,பராமரிப்பு மற்றும் தொடர் சேவைகள் கிடைக்கப் பெற இளைப்பாருதல் மையம் ( Drop in Centre ) என்னும் திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு , இந்த நிதியாண்டு முதல் ( 2020-2021 ) செயல்பட்டு வருகிறது . 

எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி , தமிழ்நாட்டில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று , எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு , அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதலமைச்சர் செய்தி வெளியிட்டுள்ளார்.


  • Share on

நிவர் புயல் சேதம்:ஆய்வு செய்ய இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு..!!

அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் ஏன் ?... சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

  • Share on