
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 2025 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறினர். இதை எடுத்து யார் இந்த விக்னேஷ் புத்தூர்? என்ற ரசிகர்கள் தேடத் துவங்கினர்.
கேரளாவின் மலப்புறம் என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயதான விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். தாயார் கே.பி.பிந்து இல்லத்தரசி. தற்போது பெரிந்தல்மன்னாவில் உள்ள பிடிஎம் அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார் விக்னேஷ் புத்தூர். எளிய குடும்பத்தை சேர்ந்த விக்னேஷ் புத்தூர், தனது பெற்றரோர் உதவியுடன் கிரிக்கெட்டை தனது தொழில்முறை வாழ்க்கையாக தேர்வு செய்தார்.
விக்னேஷ் புத்தூர் இடது கை லெக் ஸ்பின்னர் ஆவார். இன்னும் மாநில அணிக்காக கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அண்டர் 14 மற்றும் அண்டர் 19 அளவிலேயே கேரளாவுக்காக ஆடினார். அதன் பின் கேரளா கிரிக்கெட் லீக் எனும் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டும் ஆடி இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் முதலில் மிதவேக பந்து வீச்சாளராகவும், சாதாரண சுழற் பந்து வீச்சாளராகவும் இருந்தார். அதன் பின்னர் லெக் ஸ்பின்னராக மாறினார். அவருக்கு இன்னும் "சைனா மேன் பௌலிங்" எப்படி வீசுவது என்பதும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920 களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.
இன்னும் முழுமை பெறாத ஒரு லெக் ஸ்பின்னர் தான் விக்னேஷ் புத்தூர். ஆனால், அவர் வேகமாக கற்றுக் கொண்டு வருவதாலும், தனித்துவமான முறையில் பந்து வீசுவதாலும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அவரை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையேயான 2025 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணிக்கு 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் 7 ஓவர்களில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. 8 வது ஓவரில் விக்னேஷ் புத்தூர் பந்து வீச வந்தார். அரை சதம் அடித்திருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை அந்த ஓவரில் அவர் வீழ்த்தினார்.
அடுத்தாக 10 வது ஓவரில் சிவம் துபே விக்கெட்டையும், 12 வது ஓவரில் தீபக் சாஹர் விக்கெட்டையும் விக்னேஷ் புத்தூர் காலி செய்தார். இதையடுத்து சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து திணறத் தொடங்கியது. விக்னேஷ் புத்தூர் தான் வீசிய முதல் 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதிக அனுபவம் இல்லாத, முழுமை பெறாத ஒரு பந்துவீச்சாளரிடம் சிஎஸ்கே அணி தடுமாறியது மிகப்பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
தனது அறிமுக போட்டியிலேயே விக்னேஷ் புத்தூரை கிரிக்கெட்டின் தலயும், க்ளாசிக் வீரருமான எம்.எஸ்.தோனி பாராட்டியது, அவரை தட்டிக் கொடுத்து உரையாடிய வீடியோ வீடியோ இணையதளத்தில் வைரலானது.
அதோடு விக்னேஷ் புத்தூரை மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி பாராட்டி, பேட்ஜ் கொடுத்தா வீடியோ வைரல் ஆகி வருகிறது. மும்பை இந்தியன்ஸின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை வழங்கினார். அணியினரும் விக்னேஷின் வெற்றியை கொண்டாடினர்.
விக்னேஷ் புதூர் பேசுகையில், “ மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, கிரிக்கெட் விளையாடுவேன் என நினைத்தும் பார்த்ததில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி. கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு நன்றி. அவர் உறுதுணையாக இருந்ததால் தான் எந்தவித பதற்றமும் இன்றி விளையாட முடிந்தது. என்னை ஊக்குவிக்கும் அணி வீரர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.
அதோடு, விக்னேஷ் புத்தூர், கேப்டனுக்கு நன்றி அவரால் தான்.. என்று பேசியபோது.. சூர்யகுமார் யாதவ் “ போதும் போதும் தம்பி...” என்பது போல ரியாக்ட் செய்தார். நீதா அம்பானியின் காலின் விழுந்து ஆசிர்வாதமும் பெற்று கொண்டார் விக்னேஷ் புத்தூர்.