
புராணங்களின் படி நீண்ட ஆயுள் மற்றும் நீங்காத இளமையுடன் வாழும் வரத்தை சிவ பெருமானிடம் இருந்து வரமாக பெற்றவர் மார்கண்டேயர்.
சிவன் மீது கொண்ட தீராத பக்திக்கு உதாரணமாக விளங்கக் கூடியவர். இத்தகைய மார்கண்டேய முனிவரின் அவதார தினம் தான் மார்கண்டேய ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவை மகா மாதம் எனப்படும் தை மாத வளர்பிறையில் கொண்டாடப்படும் முக்கியமான நாளாகும். இந்த ஆண்டு மார்கண்டேயர் ஜெயந்தி இன்று பிப்ரவரி 01ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மார்கண்டேயர் தனது 16 வயது மட்டுமே வாழ்வார் என்ற குறைந்த ஆயுளுடன் பிறந்தவர். இவர் சிவன் மீது கொண்ட அளவு கடந்த பக்தியின் காரணமாக தன்னுடைய 16வது வயதில் எம தர்மராஜா, இவரை உயிரை பறிக்க வந்த போது, எமனான் தோற்றத்தை கண்டு அஞ்சி நடுங்கி, தனக்கு அருகில் இருந்த சிவலிங்கத்தை ஓடி சென்று கட்டி அணைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக எமதர்ம ராஜா, பாசக்கயிற்றை மார்கண்டேயர் மீது வீசிய போது, அந்த கயிறானது அவர் கட்டி அணைத்திருந்த சிவ லிங்கத்தையும் சேர்த்து சுற்றி வளைத்தது கொண்டது.
அண்ட சராசரங்களின் தலைவராக விளங்கும் தன் மீதே எமன் பாசக்கயிற்றை வீசியதால் கோபமடைந்த சிவ பெருமான், காலனை தன்னுடைய காலால் எட்டி உதைத்து, தன்னை கட்டி அணைத்தபடி இருந்த மார்கண்டேயருக்கு நித்திய சிரஞ்ஜீவியாக வாழ்வாய் என்ற வரத்தையும் இன்று போல் என்றும் இதே இளமை தோற்றத்துடன் என்றும் 16 வயதுடையவனாகவே வாழ்வாய் என்றும் வரம் அளித்தார். அதனால் மார்கண்டேயருக்கு சிவ வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மார்கண்டேய ஜெயந்தி அன்று, நித்திய சிரஞ்ஜீவி வரம் பெற்ற மார்கண்டேயரையும், சிவ பெருமானையும் வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். சிவ பெருமானின் அருள் கிடைக்கும். மோட்சம் கிடைக்கும்.
ஆகவே, மார்கண்டேயரை போல் நமக்கும் சிவனின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த நாளில் அவரை வழிபடுவது சிறப்பு. முடிந்தவர்கள் இந்நாளில் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் மார்கண்டேய புராணத்தை படிக்கலாம். இதனால் மார்கண்டேய மகரிஷியின் அருளும் நமக்கு கிடைக்கும். மாலையில் சிவ சன்னதியில் விளக்கேற்றி வைத்து சிவ மந்திரங்களை சொல்லி வழிபட்டால் அனைத்து விதமான பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். பூலோக வாழ்க்கையில் மட்டுமின்றி, வாழ்க்கைக்கு பிறகு முக்தியை பெறுவதற்கும் சிவ பெருமான் அருள் செய்வார். சிவனை மனதார நினைத்து தியானம் செய்து வழிபடுபவர்களுக்கு அவரின் அருள் கிடைக்கும். திருக்கடையூரில் மார்கண்டேய ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடத்தப்படும்.