
தமிழ்நாடு பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியதன் மூலம் பாஜகவின் அரசியல் திட்டம் என்னவாக இருக்கும்? நயினார் நாகேந்திரனின் பின்னணி என்ன?
தென்மாவட்டங்களில், குறிப்பாக சொந்த ஊர் மக்களால் "பண்ணையார்" என அடைமொழியோடு அன்பாக அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் செல்வந்தரான குடும்பத்தைச் சேர்ந்தவர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம் தான் நயினாருக்கு சொந்த ஊர் என்றாலும், நெல்லை டவுனில் தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக குடியேறிவிட்டார்.
நெல்லையின் மூத்த அதிமுக தலைவரான கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளராக அறியப்பட்டவர் நயினார் நாகேந்திரன்.
பின் வந்த நாட்களில் கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவே, கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு செல்ல, நயினார் நாகேந்திரன் அதிமுகவில் நெல்லையில் பெயர் சொல்லும் தலைவராக உருவெடுக்க ஆரம்பித்தார்.
2001 ஆம் ஆண்டு கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு கட்சி மாறியது , நயினார் நாகேந்திரன் அரசியல் சூழல் சாதகமாக திரும்பியது. 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது.
ஜெயலலிதா நிர்வாகத்தில் அதிரடியான அமைச்சர் பதவி பறிப்புகள் சாதாரணமாக நடைபெறும் நிலையில், முழுமையாக 5 ஆண்டுகள் அமைச்சராகவே தொடர்ந்ததின் மூலம் மேலும் கவனம் பெற்றார் நயினார் நாகேந்திரன். பல முறை துறைகள் மாற்றப்பட்டாலும் அமைச்சர் பதவியை இவர் இழக்கவில்லை.
2006 ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (606 வாக்குகள்) நெல்லை தொகுதியில் தோல்வியடைந்தாலும், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அமைச்சரவையில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.
2016 சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் சிறிது காலம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த நயினார் நாகேந்திரன், 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து கொண்டார்.
ஜெயலலிதாவின் தலைமையிலிருந்தது போல அதிமுக இப்போது இல்லை என காரணம் கூறி 2017 ஆம் ஆண்டு பா.ஜ.க. வில் இணைந்த நயினார், இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களே அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக கூறப்பட்டது. அண்ணாமலை அதிமுகவினரையும், அதிமுகவினர் அண்ணாமலையையும் பொதுத்தளத்தில் கடுமையாக விமர்சித்ததையும் காண முடிந்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தவரான நயினார் நாகேந்திரன் பாஜ தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, இரு கட்சிகளிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
பாஜகவிற்கு வந்த பின்பு மூன்று தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் போட்டியிட, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன்.
சொந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டம் வந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றார் நயினார் நாகேந்திரன். இதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்ற போதும், அதிமுக கூட்டணியில் தேர்வான 4 பா.ஜ.க. எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தார் நயினார் நாகேந்திரன் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவரானார் .
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் பிடித்தார்.
கட்சி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறவுகளில் அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமான உறவு பாராட்டக்கூடியவராக அறியப்படுபவர் நயினார் நாகேந்திரன். சட்டமன்றத்தில் சொந்த மாவட்டக்காரரான அப்பாவு சபாநாயகராக இருக்கும் சூழலில் பல சுவையான விவாதங்களிலும் நயினார் நாகேந்திரனின் பெயர் இடம் பெறத் தவறுவதில்லை.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தலைநகரை திருச்சிக்கு மாற்றுங்கள் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைக்க, இதனை அன்போடு பரிசீலிப்போம் என்று பதிலளித்திருந்தார் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
2024 மக்களவைத் தேர்தலில் நயினார் நாகேந்திரனை மையமாக வைத்து சர்ச்சைகளும் வலம் வந்தன. 2024 மக்களவைத் தேர்தலின்போது நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை தாம்பரத்தில் பறக்கும் படையினர் பிடித்தனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.
மேலும், தேர்தலுக்கு சுமார் ஓராண்டுக்கு முன்பு 2023 ஆம் ஆண்டில் நயினார் நாகேந்திரனின் மகன் பெயரிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் ஒன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகன் பெயரில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.
நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கம் தலைமைச் செயலர், சென்னை நகர காவல்துறை, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர், பத்திரப் பதிவுத்துறை செயலர் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புகார் அனுப்பி வைத்தது.
அதற்குப் பிறகு திருநெல்வேலி மாவட்ட மண்டல துணை பதிவுத்துறை தலைவர் இந்தப் பதிவை ரத்து செய்தார். இதுவும் அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
முக்குலத்தோர் சமுதாய தலைவர்களாக அரசியலில் பார்க்கப்படும் டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு, முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் சிதறி அதிமுகவிற்கு ஒரு பின்னடைவை தந்துள்ள வேளையில், ஒருபோதும் இவர்களை அதிமுகவில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு புறம் கூறி வரும் நிலையில், தமிழக தேர்தல் களத்தில் பெரும்பான்மை வாக்கு வங்கியாக திகழும் சமூகங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை, 2026 தேர்தலில் யார் அறுவடை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில்,
முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த நயினார் நாகேந்திரனை தமிழ்நாடு பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அரசியல் நகர்வுகளில் மிகவும் உன்னிப்பாக பார்க்க வேண்டிய விஷயம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அம்மாவின் கட்சி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை ஏற்று இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். திமுகவை வீழ்ந்த நாம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று தான் அமமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் தீய சக்தி திமுகவை வீழ்த்தவும், மோடியின் கரத்தை வலுப்படுத்தவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். இருப்போம் என மிக தெளிவாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் தனிகட்சி பதிவு செய்யும் வேலையை தொடங்கி விட்டதாகவும், அவரும் டிடிவி தினகரனையே பின்பற்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆகவே, டிடிவி, சகிகலா, ஓபிஎஸ் ஆல் பிரிக்கப்பட்ட முக்குலத்தோர் வாக்குகள், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடையின் கீழ் 2026 தேர்தலில் ஒன்று கூட வாய்ப்புள்ளது. அதற்கு மிகப்பெரும் பலமான பாலமாக நயினார் நாகேந்திரன் இருப்பார் என்றும் நம்பப்படுவதன் காரணமாகவும், பாஜக மாநிலத் தலைவர் பதவியில் நயினார் நாகேந்திரன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதும், திமுக கூட்டணியை வலு இழக்கச் செய்வதன் மூலமும் 2026 தேர்தலின் வெற்றி தோல்விக்காக நகர்வு இருக்கும் என கணிக்கப்படுவதால், முதல் கட்டமாக அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரபூர்வ அறிவிப்பு மூலம், தங்களது கூட்டணியை வலுப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கும் அதிமுக, திமுக கூட்டணியை வலு இழக்க என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.