
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள். திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிப்பவர்களை எச்சரித்து தான் அனுப்ப வேண்டும். இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர்களின் உடமைகளை பறிப்பதையும் ஏற்று கொள்ள முடியாது. கச்சத்தீவை தாரை வார்த்தது யார்? யார் ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.
தர்மபுரியில் கலெக்டர், எஸ்பியை மிரட்டுகிறார் திமுக பிரமுகர். மிரட்டப்படும் ஆடியோ வெளியாகிறது. திமுக ஆட்சியில் அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து என்ன பயன். திமுகவை வீழ்த்துவதே அதிமுகவின் குறிக்கோள். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்லை.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள். திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை. தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. கூட்டணி குறித்து அப்போது பார்க்கலாம்". என்றார்.