
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ஒவ்வொரு தவறுக்கும், ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது எனத் தொடர்ந்து பேசி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, தற்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்து உள்ளார். திருச்செந்தூரில் பக்தர்கள் அவதிப்பட்டது குறித்து புகார் தெரிவித்த போது அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதிலுக்கு தான் தற்போது அமைச்சர் சேகர்பாபுவை விமர்சித்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்றைய தினம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், 6 மணி நேரத்திற்கும் மேலாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை உணவு தண்ணீர் இன்றி, அடைத்து வைத்திருக்கின்றார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்த போது, திருப்பதி கோவிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான் என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
திருப்பதி கோவிலில் பொதுமக்களுக்கு உணவு தண்ணீர் கழிப்பறை உள்ளிட்ட போதுமான வசதிகள் செய்திருக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் உண்டியல் பணத்தை முறைகேடாகச் செலவழிப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்மையான உழைப்பில் கிடைக்கும் பணத்தில் சிறு பகுதியை, கோவில்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். உங்களைப் போல, கோவில் பிரசாதத்தில் கமிஷன் அடிப்பதில்லை.
கோபாலபுரம் குடும்பத்துக்கு நெருக்கம் என்ற ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. இதை விட அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம் காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்பதை அமைச்சருக்கு நினைவு படுத்துகிறேன். காலம் மாறும். தனது ஒவ்வொரு தவறுக்கும், அமைச்சர் சேகர்பாபு, ஆண்டவனுக்கும், பொதுமக்களுக்கும் பதில் சொல்லத் தயாராக இருந்து கொள்ளட்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.