<p><b>உடல்நலமில்லா தாயை&nbsp; பார்க்க&nbsp; பரோல் கேட்டு&nbsp; முதல்வருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார்.</b><br></p><p>ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துள்ளது.&nbsp;</p><p>இவர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கும் நிலையிலும், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறார். குடியரசுத் தலைவருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது என கூறிவிட்டார். இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.</p><p>இந்த நிலையில், சிறையிலிருக்கும் நளினி தனக்கும் தன் கணவர் முருகனுக்கும் பரோல் வழங்கக்கோரி தமிழக முதல்வருக்கும் உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், சென்னையில் இருக்கும் எனது தாய் பத்மா வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளார். அவரை கவனித்துக் கொள்ளவும் தனது மாமனார் இறந்த ஓராண்டு ஆனதால் அதற்கான சடங்குகளை செய்யவும் பரோல் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இதற்கு முன்னதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>