<p><b>ஓட்டப்பிடாரம் அருகே அரசு பேருந்தும் பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (26). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு, சுப்புராஜ் தனது இருசக்கர வாகனத்தில்&nbsp; ஓட்டப்பிடாரத்திலிருந்து புதியம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.</p><p><br></p><p>அப்போது, முப்பிலிவெட்டி அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சிலர் திருச்செந்தூருக்குப் பாதயாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக சுப்புராஜ் தனது வாகனத்தைச் சற்றே விலக்கி ஓட்டியுள்ளார். அப்போது, தூத்துக்குடியிலிருந்து கப்பிகுளம் நோக்கி வந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக சுப்புராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.</p><p><br></p><p>இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்புராஜ், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார், சுப்புராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரான தெற்கு பரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (53) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>