<p><b>கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இது வரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.</b></p><p><br></p><p>இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றன.</p><p><br></p><p>இந்த நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p><br></p><p>அப்போது அவர் கூறுகையில், ``தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியான ஒரு துயரமான, இவ்வளவு உயிர்கள் பலியான சம்பவம் இதுவே முதல் முறை.</p><p><br></p><p>சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களை நான் நேரில் சந்திக்கச் செல்கிறேன். விஜய் பரப்புரை நிகழ்த்திய பகுதி குறுகலான பாதையாகத்தான் தெரிகிறது.</p><p><br></p><p>அந்த இடம் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு போதாது. ஏன் இப்படியான இடத்தை தேர்வு செய்தார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.</p><p><br></p><p>இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்திற்கு, காவல்துறை பாதுகாப்பும் மிக குறைவாக இருந்தது. கரூர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.</p><p><br></p><p>ஆம்புலன்ஸ் அந்த கூட்டத்திற்கு மத்தியில் வந்த பிறகே இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்கிறது. இந்த சூழலில் அரசியல் பேசுவதை விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p><br></p><p>கேப்டனுடன் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். பெரிய பெரிய கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடந்ததில்லை.</p><p><br></p><p>குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் என பலதரப்பிலிருந்து மரணம் நிகழ்ந்து இருக்கிறது. எல்லோருக்கும் மன வேதனையான சூழல்" என்றார்</p>