<p><b>ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தின் குளத்தில் இறந்த நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்த ராஜாமணி - முத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.&nbsp;</p><p>இதில் ராஜகனி (38) என்பவர் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று மாலையில் சுமார் 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.&nbsp;</p><p>இந்நிலையில், இன்று காலையில் வெள்ளாரம் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இறந்த நிலையில் ஆண்&nbsp; சடலம்&nbsp; மிதந்துள்ளது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு&nbsp; ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் இறந்த நிலையில் இருந்த உடலை பொதுமக்கள் உதவியுடன்&nbsp; மீட்டு பார்த்தபோது, அது நேற்று மாலை வீட்டை விட்டு போன ராஜகனி என தெரியவந்தது.&nbsp;</p><p>இதையடுத்து போலீசார் ராஜகனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .</p>