<p><b>ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கம் நகரில் உறவுக்கார பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.</b><br></p><p>ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி ஊராட்சி, வீரன் சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (25). இவரது மனைவி பேச்சியம்மாள். சக்திவேலின் உறவு பெண் ஒருவர் கடந்த 20 நாட்களாக இவரது வீட்டில் தங்கி இருந்துள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில் அந்தப் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பேசி பழகியதாக கூறப்படுகிறது. இதை கவனித்த சக்திவேல் அந்த நபரை கண்டித்துள்ளார். அந்த நபருக்கு ஆதரவாக வீரன் சுந்தரலிங்கம் காலனியைச் சேர்ந்த சந்திரசேகரன் (27), ஸ்ரீராம் (25), சப்பாணி முத்து (24), மற்றும் மாப்பிள்ளையூரணியை சேர்ந்த கருப்பசாமி (29), ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சக்திவேலுடன் தகராறு செய்துள்ளனர்.</p><p>சந்திரசேகரன், ஸ்ரீராம், கருப்பசாமி, சப்பாணி முத்து, ஆகியோர் அரிவாளுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, வீட்டின் முன்பாக இருந்த தகர சீட்டை வெட்டி சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து சக்திவேல் ஓட்டப்பிடாரம் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை&nbsp; மேற்கொண்டு சப்பாணி முத்துவை கைது செய்தனர். மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.</p>