<p><b>ஒருவர் செய்த தவறை வைத்து மொத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதும் பழிசுமத்தக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</b></p><p>அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதாகியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இதற்கிடையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்டது தொடர்பாக அவர் கூறியதாவது;</p><p>ஒரு மனிதன் தவறுசெய்ததற்கு ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு என்று சொல்லிவிட முடியாது. அதேபோல, தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது.</p><p>தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.</p><p>மேலும், தென்மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் படுகொலைகள் அதிகரித்துள்ளதாகவும் தமிழகம் முழுவதுமே கொலை களமாக மாறி வருவதாகவும் கூறினார்.</p>