<p><b>தூத்துக்குடி செல்பி பாயிண்ட் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட மாணவர்களுக்கு போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்து உரிய அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்</b></p><p>தூத்துக்குடி செல்பி பாய்ண்ட், செயற்கை நீரூற்று மற்றும் முத்துந கர் பீச்சில் உள்ள ஐ லவ் தூத்துக்குடி ஆகிய பகுதிகள் குறித்து தவறான செய்கைகளை காட்டி, மாவட்டத்தை தவறாக சித்தரித்து அவமதிக்கும் வகையில் சில மாணவர்கள் வெளியிட்ட வீடியோ வாட்ஸ்அப், இன்ஸ் டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.</p><p>மாணவர்களின் ஆபாச நடனம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்த இந்த வீடியோ பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கண்டனத்திற்கும் ஆளானது.</p><p>இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர விசா ரணை நடத்தினர். மேலும் அவதூறுவீடியோ வெளியிட்ட 11 மாணவர்களை அடையாளம் கண்டறிந்தனர். அவர்களை அழைத்து இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்து உரிய அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.</p><p>இதனைத்தொடர்ந்து 11 மாணவர்களும் மீண்டும் செல்பி பாயிண்ட் முன்பு வரிசையாக நின்று தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று கூறியும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவையும் அவர்களே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.</p>