<p><b>தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு, கொள்ளை உட்பட 81 வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர், தூத்துக்குடி புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்</b></p><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்&nbsp; உத்தரவுபடி மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர்&nbsp; மேற்பார்வையில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கண்ணன், பொன்முனியசாமி மற்றும் மணியாச்சி உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (18.07.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி பகுதியில் உள்ள சர்ச் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சொர்ணம் மகன் ரமேஷ் (எ) ராமையா (36) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.</p><p>உடனே மேற்படி போலீசார் ரமேஷ் (எ) ராமையாவை கைது செய்தனர். இதுகுறித்து புளியம்பட்டி நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து&nbsp; ரமேஷ் (எ) ராமையாவிடம் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி&nbsp; தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 29.06.2022 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த 6 பவுன் தங்க நகை திருடிய வழக்கிலும், கடந்த 29.06.2022 அன்று மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த 8 பவுன் தங்க நகை திருடிய வழக்கிலும், கடந்த 29.06.2022 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த 5 பவுன் தங்க நகை திருடிய வழக்கிலும் மற்றும் கடந்த 02.05.2022 அன்று பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த 1 ¼&nbsp; பவுன் தங்க நகை திருடிய வழக்கிலும் சம்மந்தப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த மேற்படி திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட தங்க நகைகளில் மொத்தம் ரூபாய் 1,87,000/- மதிப்புள்ள 10 ¼ பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்ய்பட்டது.</p><p>மேலும் மேற்படி ரமேஷ் (எ) ராமையா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் 4 வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 40 வழக்குகளும், விருதுநகர் மாவட்டத்தில் 13 வழக்குகளும், தென்காசி மாவட்டத்தில் 16 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.</p><p>பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து தங்க நகைகளை மீட்ட மேற்படி போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.</p>