<p><b>தூத்துக்குடியில் 2¼ வயது பெண் குழந்தை சுவரில் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் டேவிட் (வயது 32). வெல்டர். இவருடைய மனைவி ஸ்டெபி (28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2¼ வயதில் கேத்தரின் என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.</p><p>இந்த நிலையில் ஸ்டெபி முதல் கணவரை பிரிந்து விட்டதால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டேவிட்டை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். டேவிட்டுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.</p><p>இந்த நிலையில் நேற்று&nbsp; இரவு டேவிட் வீட்டுக்கு வந்தார். அப்போதும் ஸ்டெபியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.&nbsp;</p><p>இதில் ஆத்திரம் அடைந்த டேவிட், மனைவி ஸ்டெபியை சரமாரியாக தாக்கினார். மேலும் தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தை கேத்தரினை தொட்டிலுடன் சேர்த்து சுவரில் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.</p><p>அதனைத்தொடர்ந்து இன்று&nbsp; காலையில் ஸ்டெபி தொட்டிலில் கிடந்த குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை கேத்தரின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பச்சிளம் குழந்தை சுவரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>