<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில், உரிமம் இன்றி பொட்டலமிடப்பட்ட 11 டன் உப்பை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். </b></p><p>தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், தூத்துக்குடி மாநகர் பகுதி-2 உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் நேற்று தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு உப்பு ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த லாரியில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இன்றி பொட்டலமிடப்பட்ட 11 டன் உப்பு இருந்தது. உடனடியாக அதிகாரிகள், அந்த லாரி மற்றும் அதில் இருந்த 11 டன் உப்பையும் பறிமுதல் செய்தனர். இந்த உப்பில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கை அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி உணவு பொருள் உற்பத்தி செய்வது, இருப்பு வைப்பது, லாரி போன்ற வாகனங்களில் போக்குவரத்து செய்வது, சில்லறை விற்பனை செய்வது ஆகியவை தண்டனைக்கு உரியதாகும். எனவே, உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள் அனைவரும் உடனடியாக www.foscos.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் எடுத்த பின்னரே தொழில் புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறினால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உணவு சார்ந்த தொழிலை நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும், என்று மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.</p>